தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், விடுமுறை தினமான நேற்று ஏற்காட்டிற்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.
சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும், தொடர் மற்றும் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து பனிப்பொழிவு, சாரல் மழை என ஏற்காடு இதமான இயற்கை சூழலில் காட்சியளித்தது. ஆனால் தற்போது அதிகாலையில் இதமான குளிரும், பகல் நேரத்தில் வெயிலும் காணப்படுகிறது. இதன் காரணமாகவே, விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள், காலை முதலே ஏற்காட்டில் குவிய துவங்கியிருந்தனா். அண்ணாபூங்கா, வியூபாயின்ட், கிளியூர் நீர்வீழ்ச்சி, ரோஜா பூந்தோட்டம் உள்ளிட்ட இடங்கள் சுற்றுலா பயணிகளின் வருகையால் களை கட்டியது.

படகு இல்லத்தில், நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து ஏரியில் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏற்காட்டில் 49வது கோடை விழா மலர் கண்காட்சிக்கான பணிகள் தொடங்கி உள்ளது. கொல்கத்தாவில் இருந்து 4,000 டேலியா நாற்றுகள் கொண்டு வரப்பட்டு அண்ணா பூங்காவில் நடவு செய்யும் பணி நடந்து வருகிறது.
கோடை விடுமுறையையொட்டி, கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!


