கடலூர் மாவட்டம் பெரியகங்கனகுப்பத்தில் 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அவற்றின் மாதிரிகளை ஆய்வு செய்ததில், பறவைக் காய்ச்சல் அதாவது (எச்5என்) இருப்பது கண்டறியப்பட்டது. அண்மையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிளும் காகங்கள் இறந்து கிடந்தன. சேலத்தில் 1,500-க்கும் மேற்பட்ட காகங்கள் மர்மமான முறையில் உயிரிழந்தன. இதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காகங்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் பெரியகங்கனகுப்பத்தில் 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் அப்பகுதி மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்துள்ளனா். இறந்து கிடக்கும் காகங்களை மற்ற உயிரினங்கள் கொத்தி திண்பதால் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. காகங்களின் உடல்களை நாமக்கல்லில் உள்ள ஆய்வு கூடத்துக்கு அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். காகங்கள் இறப்பு குறித்து ஆய்வு செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், பறவைக்காய்ச்சல் எதிரொலி மற்றும் காகங்களின் இறப்பு காரணமாக, நாமக்கல்லில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளின் அளவு குறைந்துள்ளது. பறவை காய்ச்சல் காரணமாக, இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய சவுதி அரேபியா தடை விதித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளின் அளவு குறைந்துள்ளதாக முட்டை ஏற்றுமதியாளர்கள் தகவல் அளித்துள்ளனர்.


