நடிகை திரிஷா குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மதுரை மாநகர் முழுவதும் திரிஷா நற்பணி மன்றத்தின் சார்பில் கண்டனச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நட்பைக் கொச்சைப்படுத்துவதா? – நற்பணி மன்றம் ஆவேசம்
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சமீபத்தில் பொதுக்கூட்டப் பேச்சு ஒன்றில் நடிகை திரிஷா குறித்து அவதூறான முறையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்குத் கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் மதுரை மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் கடுமையான எச்சரிக்கைகளும் இடம்பெற்றுள்ளன.

அதில், “பெண்கள் நம் நாட்டின் கண்கள். இருவரின் நட்பைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் பேசுவது கடும் கண்டனத்துக்குரியது. ‘யாகாவாராயினும் நாகாக்க’ என்ற வள்ளுவரின் குறளுக்கு ஏற்பப் பேசுவதுதான் தமிழ் மக்களின் மாண்பு. முன்னாள் அமைச்சரே! மாண்பு தவற வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை
தொடர்ந்து அந்தச் சுவரொட்டியில், “எங்கள் அன்பு அக்கா திரிஷா அவர்களைப் பற்றி யார் தவறாகப் பேசினாலும் எங்களால் ஏற்க முடியாது. இதையும் மீறித் தொடர்ந்து அவதூறு பரப்பினால் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த நேரிடும்” எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெண்களைப் பற்றியும் தனிப்பட்ட நபர்களின் நட்பைப் பற்றியும் பொதுவெளியில் தரக்குறைவாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டு, மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்தச் சுவரொட்டிகள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
