நாடாளுமன்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த அதானி முறைகேடு விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளது!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடவுள்ள நிலையில் மணிப்பூர் விவகாரம், அதானி விவகாரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை கொறடா மாணிக்கம் தாகூர் அதானி விவகாரத்தை மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று கோரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த அதானி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசின் மௌனம் இந்திய ஒருமைப்பாடு, பொருளாதார மற்றும் உலகளவில் இந்தியாவின் நற்பெயரை குறைப்பதாகவும், எனவே அதானி மற்றும் அதானி உடனான நட்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மானத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு குறித்து உடனடியாக விவாதத்திற்கு ஏற்க வேண்டும் எனவும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல்வேறு உறுப்பினர்கள் வழங்கி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.