டெல்லி மக்களின் உரிமைக்காக போராடிய திமுகவுக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி
டெல்லி மக்களின் உரிமைக்காக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் திமுக போராடியதற்காக மனமார்ந்த பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்வதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எழுதிய கடிதத்தில், தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போல் தரம் குறைக்கும் வகையில், மாநிலங்களவையில் ஒன்றிய பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்ட டெல்லி சேவைகள் சட்ட (இருத்து மசோதாவினை திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் எதிர்த்ததைத் தொடர்ந்து, அதற்கு நன்றி தெரிவித்து மாண்புமிகு டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நேற்று (8-6-2029) கடிதம் எழுதியுள்ளார்.

மாண்புமிகு டெல்லி முதலமைச்சர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், ஒன்றிய அரசு கொண்டுவந்த டெல்லி சேவைகள் சட்ட இருத்த மசோதா, 2023-ஐ எதிர்த்து வாக்களித்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, 2 கோடி டெல்லி மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் டெல்லி மக்களின் உரிமைகளுக்காகப் போராடியதற்காக மனமார்ந்த பாராட்டுக்களைப் பதிவு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசியலமைப்பின் கொள்கைகள் மீது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை பல்லாண்டுகளுக்கு நினைவுகூரப்படும் என்று தெரிவித்துள்ள மாண்புமிகு டெல்லி முதலமைச்சர் அவர்கள், அரசியலமைப்பை பலவீனப்படுத்தும் சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொடர்ச்சியான ஆதரவை தாம் எதிர்பார்ப்பதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.