எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள ராகுல்காந்தி அழைப்பு
பீகார் மாநிலம் பாட்னாவில் நிதிஷ்குமார் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சரத் பவார், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கும் முன் பாட்னாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, “இந்தியாவில் நடப்பது கொள்ளை யுத்தம். காங்கிரஸ் ஒற்றுமை யாத்திரை நடத்தும் வேளையில் பாஜக பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து வருகிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்துவோம். 50 நாட்களாக மணிப்பூர் பற்றி எரிந்துவருகிறது. ஆனால் பிரதமர் மோடி அமைதி காத்து வருகிறார். பிரதமர் நாட்டிலேயே இல்லாத சமயத்தில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரதமர் மோடிக்கு இந்த கூட்டம் முக்கியமில்லை என்பது நன்றாக தெரிகிறது.

இந்தியாவில் தற்போது நடைபெறுவது சித்தாந்தங்களுக்கு இடையிலான போர். நாட்டு மக்களை பிரிக்கும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது. நாட்டையும், மக்களையும் ஒற்றுமைப்படுத்தும் பணியை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. வெறுப்பு உணர்வை அன்பால் மட்டும் தான் வெல்ல முடியும். காங்கிரஸின் மரபணு பீகாரில் இருக்கிறது” என்றார்.