ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் வரும் 30ஆம் தேதி பாஜகவில் இணைய உள்ளதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
நில முறைகேடு விவகாரத்தில் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனை, அண்மையில் அமலாக்கத்துறை கைது செய்தது. இதன் காரணமாக ஜே.எம்.எம். கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநில அமைச்சருமான சம்பாய் சோரன் முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். இதனை தொடர்ந்து, வழக்கில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுதலையானார். இதனை தொடர்ந்து, ஹேமந்த் சோரன் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன், தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தொடர் பயணம் மேற்கொண்டு சம்பாய் சோரன் கட்சியினரை சந்தித்து வந்தார்.
இதனிடையே டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, சம்பாய் சோரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து, வரும் 30-ம் தேதி சம்பாய் சோரன் தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.கவில் இணைய உள்ளதாகவும், ராஞ்சியில் நடைபெறும் விழாவில் பாஜக தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அசாம் மாநில பாஜக முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மா தனது வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ஜார்கண்ட் மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.