இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்தவர் அம்பேத்கர் – பிரதமர் மோடி
இந்த நாடாளுமன்றம் பல வரலாற்று முடிவுகளை கண்டுள்ளது. இதே நாடாளுமன்றத்தில் தான் வாஜ்பாய் அரசு ஒரே வாக்கில் கவிழ்க்கப்பட்டது. அதுவே நம் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் பலம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “வரலாற்று சிறப்புமிக்க இந்த நாடாளுமன்ற கட்டிடத்திற்கு நாம் அனைவரும் நன்றி கூற உள்ளோம். ஆங்கிலேயர்களால் இந்த கட்டிடம் கட்டப்பட்டது உண்மை தான். ஆனால் இது பல இந்தியர்களின் கடின உழைப்பால் கட்டப்பட்டது என்பதை மறக்க கூடாது. நாம் புதிய நாடாளுமன்றத்திற்கு இடம்மாற உள்ளோம். ஆனால் இந்த கட்டிடம் இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் கட்டிடமாக விளங்கும். உலகமே இன்று இந்தியாவை வியந்து பார்த்து வருகிறது. முன்னேற்றத்தின் அலை நாடு முழுவதும் வீசி வருகிறது. சந்திரயான் 3 வெற்றி நம் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. இந்த நேரத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், இஸ்ரோவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஜி20 வெற்றி என்பது இந்தியாவின் வெற்றி, தனிப்பட்ட நபரின் வெற்றி அல்ல. இது கொண்டாடப்பட வேண்டிய வெற்றி.
இந்தியா தலைமையிலான ஜி20 மாநாட்டில், ஆப்ரிக்க யூனியனும் அதில் இணைக்கப்பட்டு இருக்கிறது என்பதை இந்தியா பெருமையாக பார்க்கும். உலக தேவைகளை பூர்த்தி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகித்துள்ளது என்பதை உங்களால் நினைத்து பார்க்க முடியுமா? பலரும் ஜி20 மாநாட்டில் ஒருமித்த தீர்மானம் கொண்டுவரப்படாது என்று நினைத்தார்கள். உலகமே சாத்தியமில்லை என்றது. ஆனால் அதை சாதித்துக் காட்டினோம். இந்த நாடாளுமன்றத்தில் நம் அனைவரிடமும் ஒரு சில கருத்து வேற்றுமைகள் இருந்திருக்கலாம். அதேநேரம் நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்கிற உணர்வும் நமக்கு இங்கு ஏற்பட்டது. இங்கு முதன்முறை நான் வந்தபோது, நான் பயபக்தியுடன் தலை குணிந்து வணங்கினேன்.
நான் இங்கு வருவேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. இந்த நாடு எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை அளித்து, இத்தனை மதிப்பையும், அன்பையும் அளிக்கும் என நான் நினைக்கவில்லை. அந்த தருணம் எனக்கு உணர்வுப்பூர்மான ஒன்று. குஜராத் ரயில் நிலையத்தில் டீ விற்ற ஒரு ஏழை, இந்த நாட்டின் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளான் என்பதே அதற்கு காரணம். நேரு, சாஸ்திரி, வாஜ்பாய் என எல்லோரும் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்த நாடாளுமன்றத்தில் பாடுபட்டுள்ளனர். இன்று அவர்களை நினைவுகூர மற்றும் அவர்களின் பங்குகளிப்புகளை போற்ற நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நாடாளுமன்றத்தை தீவிரவாதிகள் தாக்கியபோது, அது ஒரு கட்டிடத்தின் மீதான தாக்குதல் அல்ல, அது நம் நாட்டின் ஆன்மை மீதான தாக்குதலாக பார்த்தேன், நம் நாட்டின் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாக பார்த்தேன்.
தீவிரவாதத்திற்கு எதிராக வீரமரணம் அடைந்த வீரர்களை நினைத்து பெருமைக் கொண்டு, அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். நாடாளுமன்ற நிகழ்வுகளை பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் தெரிவிக்கும் பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். சில பத்திரிக்கையாளர்கள் நாடாளுமன்ற நிகழ்வுகளை மக்களிடம் தெரிவிப்பதிலேயே தங்கள் வாழ்நாளை ஓட்டியுள்ளார்கள். நாடாளுமன்றத்தின் உள்ளே மற்றும் நாடாளுமன்றத்தின் பூட்டிய கதவுகளுக்கு பின்னால் நடப்பவை என பலவற்றை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள். அவர்கள் நம் நாடாளுமன்றத்தின் தூண்களாக உள்ளார்கள். இன்று பத்திரிக்கையாளர்கள் கூட உணர்வுப்பூர்மகா இருக்கிறார்கள்.
இங்கு நிறைய நேரம் அவர்கள் செலவிட்டிருக்கிறார்கள். இந்த நாடாளுமன்றம் பகத்சிங்கின் தைரியத்தை பார்த்தது. இந்த நாடாளுமன்றத்தில் தான் நேரு சுதந்திரம் தொடர்பான உணர்வுப்பூர்வமான பேச்சை வெளிப்படுத்தினார். இதே நாடாளுமன்றத்தில் தான் அரசுகள் வரும், போகும், ஆனால் நாடு எப்போதும் இருக்கும் என்று வாஜ்பாய் சொன்னார். மன்மோகன் சிங் அரசின் கீழ் வாக்கிற்கு பணம் கொடுக்கப்பட்ட சம்பவத்தையும் இந்த நாடாளுமன்றம் கண்டது. சட்டப்பிரிவு 370 ரத்து, ஒரே நாடு – ஒரே வரி, ஜி.எஸ்.டி உட்பட பல வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எல்லாம் இந்த நாடாளுமன்றம் கண்டுள்ளது. இந்த நாடாளுமன்றத்தில் தான் வாஜ்பாய் அரசு ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்தது. இதுதான் நம் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் பலம்” என்று தெரிவித்தார்.