மங்களூருவில் பெண்ணின் மீது ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளான நிலையில், அவரது மகள் தனி ஒருவராக ஆட்டோவை தூக்கி தாயை மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே கின்னிகோலி ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் சேத்தனா. இவர் அந்த பகுதியில் பிக்னிக் கலெக்சன் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள டியூஷன் சென்டருக்கு படிக்க சென்ற மகளை அழைத்து வருவதற்காக சேத்தனா சென்று கொண்டிருந்தார்.

டியூஷன் சென்டர் அருகே அவர் சாலையை கடந்தபோது அந்த வழீயாக வேகமாக வந்த ஆட்டோ ஒன்று சேத்தனா மீது மோதியது. அத்துடன் மோதிய வேகத்தில் ஆட்டோ அவர் மீதே கவிழ்ந்தது. இதனை கவனித்த சேத்தனாவின் மகள் உடனடியாக ஓடிச்சென்று தனி ஒருத்தியாக அந்த ஆட்டோவை தூக்கி நிறுத்தி தன் தாயை காப்பாற்றினார். இதில் பலத்த காயம் அடைந்த சேத்தனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, சிறுமி தீரமுடன் செயல்பட்டு, தனது தாயை மீட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிறுமிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.