மூடா நில ஒதுக்கீடு விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் எனப்படும் மூடா அமைப்பு முறைகேடாக சித்தராமையாவின் மனைவி பேரில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால் தனது மனைவிக்கு இழப்பீடாக இந்த வீட்டு மனைகள் வழங்கப்பட்டதாக சித்தராமையா விளக்கம் அளித்தார். இதனிடையே, மூடா நில ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சித்தராமையாவை விசாரிக்க கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் அண்மையில் அனுமதி வழங்கி இருந்தார்.

ஆளுநரின் உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முதலமைச்சர் சித்தராமையா வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை கடந்த 12ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்றம், முதலமைச்சர் சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்ய கர்நாடக லோக் ஆயுக்தா போலீசாருக்கு உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பாக 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, மூடா நில ஒதுக்கீடு விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, பார்வதியின் சகோதரர் மல்லிகார்ஜுன சுவாமி மற்றும் நிலத்தை விற்ற தேவராஜ் ஆகிய 4 பேர் மீது மைசூரு லோக் ஆயுக்தா போலிசார் கடந்த 27ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் நில முறைகேடு விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத்துறையினர் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். மூடா நில ஒதுக்கீடு விவகாரத்தில் சித்தராமையா மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கை அமலாக்கத்துறையினர் பதிவு செய்தனர்.