விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது- பிரதமர் மோடி
கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளது.

டெல்லியில் 17-வது இந்திய கூட்டுறவு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, “கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான சிறு விவசாயிகள் இடைத்தரகர்கள் குறுக்கீடு இன்றி பலன் பெறுகின்றனர். நாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்களை ஊக்கப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரதம மந்திரி கிசான் திட்டத்தின்கீழ் கோடிக்கணக்கான விவசாயிகள் பலன்பெற்று வருகின்றனர். பால் பொருட்கள் முதல் நெய் வரை இந்திய பொருட்களுக்கு உலகளவில் தேவை அதிகரித்துள்ளது. சிறுதானியங்களுக்கு புதிய சந்தை உருவாகியுள்ளது. பாஜக பதவியேற்ற பிறகு மீன்வளத்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் மீன்வளத்துறைக்காக ரூ.38,000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

அரசாங்கத்தின் பலன்கள் மக்களை நேரடியாக சென்றடைய டிஜிட்டல் இந்தியா திட்டம் பெரிதும் உதவுகிறது. பண பரிவர்த்தனைகளை சார்ந்து இருப்பதை அகற்றுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் இந்தியாவின் அடையாளமாக மாறி வருகிறது. PM-KISAN திட்டத்தின் கீழ் இடைத்தரகர்களின் குறுக்கீடு இல்லாமல் தற்போது கோடிக்கணக்கான சிறு, குறு விவசாயிகள் பலன்களைப் பெறுகின்றனர்” எனக் கூறினார்.


