தேர்தல் பத்திரங்களை வழங்குவதற்கு வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தேர்தல் பத்திரங்கள் என்பது இந்திய குடிமக்களும் நிறுவனங்களும் தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் ஒரு வழிமுறையாகும். 2017 இல் தேர்தல் பத்திரங்கள் நிதி மசோதாவை அறிமுகம் செய்த பாஜக அரசு, மக்களவை ஒப்புதல் இல்லாமலேயே 2018 ஜனவரி 29இல் அதனை நடைமுறைப்படுத்தியது.
இந்த நிலையில், தேர்தல் பத்திரங்களை வழங்குவதற்கு வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தோர் விவரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அந்த உத்தரவில், மேலும் தேர்தல் நிதியை திருப்பிக் கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது. கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்த வேறு வழிகள் உள்ளன என்று ஐந்து பேர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் நன்கொடைகளை வெளியிடக் கூடாது என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

2019 முதல் தேர்தல் பத்திரங்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திற்கு எஸ்பிஐ வழங்க வேண்டும். இந்த தகவலை தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ இணையத்தில் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசை கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என்பதை முன்பே நீதிமன்றங்கள் கூறியுள்ளன. தகவல்களை தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறிய வகையில் உள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசியல் சாசனப் பிரிவு 19 (1) ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.