நடிகைகள் பாலியல் புகார் விவகாரத்தில் ஹேமாகமிட்டியின் அறிக்கையை வரவேற்பதாகவும், அதன் பரிந்துரையை செயல்படுத்த வேண்டும் என்று நடிகர் மம்முட்டி தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல் புகார் குறித்து நீதிபதி ஹேமா கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து, மலையாள திரைப்பட நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்ளிட்ட அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக நடிகர் மம்முட்டி கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘கேரள திரைத்துறையில் எந்த ஆதிக்க குழுவும் இல்லை என்றும், அம்மா அமைப்பின் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடுவதற்காக காத்திருந்ததால், பாலியல் புகார் தொடர்பாக இதுவரை தனியாக கருத்து தெரிவிக்கவில்லை என்றும் நடிகர் மம்முட்டி தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் திரைத்துறையிலும் உள்ளதாகவும், திரைத்துறையை சமூகம் உன்னிப்பாக கவனிப்பதால், சிறிய பிரச்சினையாக இருந்தாலும் பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளாவதாகவும் மம்முட்டி கூறியுள்ளார்.
ஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்பதாக தெரிவித்துள்ள நடிகர் மம்முட்டி, அதன் பரிந்துரையை செயல்படுத்த அனைத்து அமைப்புகளும் வேறுபாடின்றி ஒற்றுமையாக நிற்க வேண்டிய நேரம் இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகைகள் பாலியல் புகார் தொடர்பாக போலீஸ் விசாரணை நடைபெறுவதாகவும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தண்டனையை முடிவு செய்யட்டும் என்றும் நடிகர் மம்முட்டி கூறியுள்ளார். ஹேமா கமிட்டியின் பரிந்துரைகளை செயல்படுத்த, சட்டத் தடைகள் இருந்தால் தேவையான சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.