கம்பு என்பது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. கம்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது. ரத்தசோகை இருப்பவர்கள் கம்பினை அடிக்கடி சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். மேலும் தலைமுடி உதிர்வதற்கு கம்பு நல்ல தீர்வாகவும் விளங்குகிறது. அதேசமயம் கம்பு உடல் சூட்டை தணிக்கவும் உதவுகிறது. எனவே இந்த வெயில் காலத்தில் கம்பு கஞ்சி செய்து குடித்துப் பாருங்கள்.
தக்காளி கம்பு கஞ்சி செய்ய தேவையான பொருட்கள்:
தக்காளி – 2
(சிறியதாக இருந்தால் இரண்டு பெரியதாக இருந்தால் ஒன்று)
கம்பு மாவு – அரை கப்
மிளகுத்தூள் – 1/4 ஸ்பூன்
நெய் – 1/2 ஸ்பூன்
செய்முறை:
தக்காளி கம்பு கஞ்சி செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் தக்காளியை சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வேக விட வேண்டும்.
இப்போது தக்காளியின் தோலை உரித்து அதனை மிக்ஸியில் அரைத்து கூழாக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் மற்றொரு பாத்திரத்தில் கம்பு மாவினை எடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு கம்பு மாவிலை சூடாக்கி, சூடான பின் அதில் தக்காளி கூழை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
அடிக்கடி கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் அடியில் பிடித்து விடும். இப்போது கஞ்சி கெட்டியாக வந்த பிறகு அதில் நெய் சேர்த்து இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து இறக்கி விட வேண்டும்.
இப்போது தக்காளி கம்பு கஞ்சி தயார்.
குறிப்பு: (தேவைப்பட்டால் பரிமாறும் சமயத்தில் வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்)