குஜராத் மாநிலம், சூரத்தில் பாஜக மகளிர் அணி தலைவி தீபிகா படேல் (30) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சூரத்தின் பிம்ராட் பகுதியில் நடந்தது. அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் தீபிகா பிணமாக கிடந்தார்.
சம்பவ இடத்திலிருந்து தற்கொலைக் கடிதம் எதுவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. தீபிகா பட்டேல் தற்கொலை செய்து கொண்டதையடுத்து குஜராத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை போலீசார் சிறப்பு வழக்காக எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீபிகாவின் மரணத்திற்குப் பிறகு அவரது தோழியுடன் பேசியதை காவல்துறை வெளிப்படுத்தியுள்ளது. அதில் மன அழுத்தத்தில் இருப்பதாக பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். காவல்துறை கூறுகையில், சம்பவத்திற்கு முன்பு, தீபிகா படேல் வார்டு 30 கவுன்சிலர் சிராக் சோலங்கியை அழைத்து, மன அழுத்தத்தில் இருப்பதாகவும், தனது வாழ்க்கையை முடிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
சகோதரர் சிராக் உடனடியாக தீபிகா பட்டேல் வீட்டுக்குச் சென்றுள்ளார். பலமுறை கதவைத் தட்டியும் தீபிகாவிடம் இருந்து பதில் வரவில்லை. இதையடுத்து கதவை உடைத்து பார்த்தபோது மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் தீபிகா பிணமாக கிடந்தார்.
சம்பவத்தன்று தீபிகாவின் கணவர் வீட்டில் இல்லை. வீட்டில் குழந்தைகள் மட்டுமே இருந்தனர். சிராக் சோலங்கி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அங்கு டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் தூக்கிட்டு இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது தற்கொலைக்கான காரணத்தை கண்டறிய அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கிடையில், இறந்தவரின் உறவினர் ஒருவர் கூறுகையில், தீபிகா நீண்ட காலமாக பாஜக தொண்டர். சமூக சேவையும் செய்து வருவதாகவும் கூறினார். தீபிகா கொலை செய்யப்பட்டு இருக்கலாம். இந்த விவகாரத்தை போலீசார் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
துணை போலீஸ் கமிஷனர் விஜய் சிங் குர்ஜார் இதுகுறித்து, “அல்தானாவில் உள்ள வார்டு எண் 30ன் பாஜக மகிளா மோர்ச்சா தலைவராக தீபிகா இருந்தார். தற்போது தற்கொலைக்கான காரணங்கள் தெரியவில்லை. குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீபிகா படேலின் மரணம் சூரத் மற்றும் குஜராத் அரசியல் வட்டாரங்களில் சோக அலையையும் கவலையையும் உருவாக்கியுள்ளது. மன அழுத்தத்திற்கான காரணங்கள் ஆராயப்படுகின்றன. இந்த வழக்கின் விசாரணையும் கொலையா என்ற கோணத்தில் நடந்து வருகிறது’’என்றார்.