தமிழக அரசியலில் சமீபகாலமாக கட்சி மாறுதல்கள் அதிகரித்து வரும் நிலையில், பாஜகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியைச் சேர்ந்த விஜயதரணி, கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பெண் தலைவர்களில் ஒருவராக அறியப்பட்டார். தமிழக சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் முதன்மை கொறடாவாகவும், அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது நாடாளுமன்ற அரசியலில் அதிக ஈடுபாடு காட்டியதாகக் கூறப்படும் விஜயதரணி, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை எதிர்பார்த்திருந்தார். ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்காத நிலையில், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தார்.
பாஜகவில் இணைந்த பிறகு குறிப்பிடத்தக்க பொறுப்புகள் வழங்கப்படாதது உள்ளிட்ட காரணங்களால் அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியவில்லை. இந்த சூழலில், பாஜகவில் இருந்து விலகிய விஜயதரணி, சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் தவெகவில் இணைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜயதரணியுடன், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் தவெகவில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தமிழக அரசியலில் புதிய அரசியல் சமன்பாடுகளை உருவாக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
