ஒரு திரைப்படத்தை வெற்றிப்படமாக இயக்கத்தெரிந்த இயக்குனர் சீமானுக்கு, கட்சியை நல்ல முறையில் வழிநடத்த தெரியவில்லை என்று நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறும் தொண்டர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து திருச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கரூர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், மண்டல தலைவர், செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் என முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகி வெளியேறி வருகின்றனர். அதேபோன்று நாம் தமிழர் கட்சியின் தொண்டர்களும் பல்வேறு பகுதிகளில் இருந்து அக்கட்சியின் தலைமை மீது அதீர்ப்தி அடைந்து கட்சிப் பணியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
அந்த வரிசையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் – “விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து வருகிறேன். நாம் தமிழர் கட்சியில் என்னால் முடிந்த வரை கட்சி பணிகள் அனைத்தும் சிறப்பாக செய்தேன். 2 நாடாளுமன்றத் தேர்தல், 2 சட்டமன்றத் தேர்தல், ஒரு உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தலிலும் நான் சிறப்பாக வேலை செய்தேன்.
மாவட்டத்தின் சிறந்த தொகுதியாக செயல்பட்டு வந்தோம். இது நாள் வரை நாம் செய்த செயல்கள், உடல் உழைப்பு மற்றும் பண விரயம் இவை எவையும் சீமான், பொருட்படுத்தும் படி இல்லை. இது அனைத்து பொறுப்பாளருக்கும் சமம்.
அண்ணன் (சீமான்) கூறியது:- இந்த தொகுதியில் உள்ள எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது. நீங்கள் என்னிடம் எந்த கேள்வியும் கேட்ககூடாது. நீங்கள் கட்சியில் இருந்தால் இருங்கள், இல்லாவிட்டால் கிளம்புங்கள் என்று கூறினார்.
ஒன்றுக்கு இருமுறை பேசியும் நான் செய்வதுதான் செய்வேன் நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என்று கூறியதன் பேரில், அண்ணா நாங்கள் உங்களிடம் கேட்டது பணமோ பொருளோ அல்ல..எங்களுக்கான மரியாதை, அங்கீகாரம் தான். அதை உங்களால் தர முடியவில்லை.
எனவே, மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன். நாம் தமிழர் கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விலகுகிறேன். இதுநாள் வரை என்னுடன் பணியாற்றிய அனைத்து பொறுப்பாளர்களுக்கும் மற்றும் உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு கட்சியை வழிநடத்த தெரியவில்லை. கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை அடிமையைப் போல் நடத்துவதாக நிர்வாகிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். கட்சியில் சீமானை தவிர வேறு யாரும் புதியதாக சிந்திக்க கூடாது. செயல்படக் கூடாது என்று புலம்புகின்றனர்.
இயக்குனர் சீமான், இப்போதும் இயக்குனராகவே இருக்கிறார். ஒரு கட்சியின் தலைவராக, எல்லோரையும் அரவணைத்து செல்லக்கூடிய பக்குவம் உள்ளவராக ஒரு நாளும் செயல்பட்ட தில்லை என்று கொட்டி தீர்க்கிறார்கள்.