பிபிசி வெளியிட்ட குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை பார்த்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குஜராத் கலவரம் பற்றி பிபிசி சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆவண திரைப்படம் இந்திய அரசியலில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியது. குஜராத் கலவரத்திற்கு பிரதமர் மோடி தான் காரணம் என்ற வகையில் அந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு ஆளும் பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். தொடர் நடவடிக்கையாக சமூக வலைதளங்களில் இருந்து பிபிசியில் ஆவணப்படம் நீக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் இதற்கு தடையும் விதித்தனர்.

இந்தநிலையில் சென்னை டிபி சத்திரம் அம்பேத்கர் சிலை அருகே, ஒன்று கூடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் தெருக்கள் தோறும் பிபிசியின் ஆவணப்படத்தை கொண்டு சேர்க்க வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் அமைப்பு சட்டத்தின் உரிமையை பாதுகாப்போம், மத்திய அரசின் கருத்துரிமை பறிப்பு எதிரான போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் சாலையோரம் அமர்ந்து செல்போன்களில் பிபிசியில் ஆவண படத்தை பார்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வடசென்னை மாவட்ட தலைவர் சித்தார்த்தன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இதில் சென்னை மாமன்ற 98 வது வார்டு கவுன்சிலர் பிரியதர்ஷினி உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் டிபி சத்திரம் போலீசார் கைது செய்தனர்.
