தான் யாா் மனதையும் புண்படுத்தும் விதமாக நடந்து கொள்பவன் அல்ல என திரிஷா குறித்த சர்ச்சைக்கு நயினாா் நகேந்திரன் விளக்கமளித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தில் நிர்வாகிகள் சந்திப்பு பரப்புரை கூட்டம் சேலம் சீலநாயக்கன்பட்டியில் பிப்ரவரி 13-ம் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் தவெக தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசுகையில், “எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுகவை எடப்பாடி வைத்துள்ளார். அண்ணா ஆரம்பித்த திமுகவை மு.க.ஸ்டாலின் வைத்துள்ளார்” என்று அரசியல் ரீதியான கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தாா். மேலும், “அடுத்தவர்கள் அட்ரஸில் அரசியல்வாதியாக இருக்கும் இவர்கள் எல்லாருக்கும் ஒரு சவால். என்னைப் போல் தனியாக சொந்தமாக கட்சி ஆரம்பித்து குறைந்தபட்சம் ஒரு சதவீதம் வாக்கு வாங்கிக் காட்டும் தில் இருக்கிறதா? திராணி இருக்கிறதா? 30 ஆண்டுகளாக மக்கள் இயக்கமாக இருந்து மிகப்பெரிய அரசியல் கட்சியாக வளர்ந்துள்ளோம் என்று கூறினாா்.
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டிலிருந்து வெளியே வரவேண்டும். திரிஷா வீட்டிலிருந்து வெளியே வரவேண்டும். வெளியில் வந்தால் தான் எல்லாமே நடக்கும்”என்று தெரிவித்திருந்தார். திரிஷா குறித்த பாஜக தலைவர் நாகேந்திரனின் கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டனங்கள் குவிய குவிந்தன. பல்வேறு சா்ச்சைகளையும் ஏற்படுத்தின.

விஜய்-திரிஷாவை சோ்த்து வைத்து நயினாா் பேசிய கருத்து சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவா் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் எதிா்ப்பு கூறி வருகின்றனா். இந்நிலையில் தன்னுடைய கருத்துக்கு பதிலளித்த அவா், தான் யாா் மனதையும் புண்படுத்தும் விதமாக நடந்து கொள்பவன் அல்ல எனக் கூறியுள்ளாா். அதே நேரத்தில் அப்படி கூறியதற்கு அவா் தற்போதும் மன்னிப்பு கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயுடன் திரிஷா பற்றி விமர்சனம் செய்த நயினாரின் பேச்சுக்கு குவியும் கண்டனங்கள்!!


