பிற நாட்டவர்களோடு பேச இந்தி பயன்படாது , மாறாக ஆங்கிலம்தான் பயன்படும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பாரத் ஜோடோ யாத்ரா எனப்படும் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தற்போது ராஜஸ்தானில் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்தப் பயணத்திற்கு இடையே ஆல்வார் நகரில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்படுவதை பாஜக தலைவர்கள் விரும்புவதில்லை என்றும், ஆனால் பாஜக தலைவர்களின் குழந்தைகள் அனைவரும் ஆங்கில வழிக் கல்வியைத்தான் படித்து வருகிறார்கள் என்றும் விமர்சித்தார்.

உண்மை என்னவென்றால், ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரது குழந்தைகள் ஆங்கிலம் கற்கக் கூடாது என்பதுதான் பாஜக தலைவர்களின் எண்ணம் என்றும், ஏழை மாணவர்கள் பெரிய கனவுகளை காணக்கூடாது என்பதும், பரம்பரைத் தொழிலில் இருந்து வெளியேறிவிடக் கூடாது என்பதும் தான் அவர்களின் எண்ணம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஏழை மாணவர்கள் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. ஏனெனில், பிற நாட்டவர்களோடு பேச இந்தி பயன்படாது; ஆங்கிலம் பயன்படும். ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் குழந்தைகளும் ஆங்கிலம் கற்க வேண்டும். அமெரிக்கர்களோடு போட்டியிட்டு அவர்களை வெற்றி கொள்ள வேண்டும். அதற்கு அமெரிக்கர்களின் மொழியில் பேச நமது குழந்தைகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசு 1,700 ஆங்கில வழி பள்ளிகளை திறந்துள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறினார்.