தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பாஜக-விடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என வி.சி.க.தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளாா்.
சென்னை அசோக் நகர் விசிக அலுவலகத்தில், அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோல். திருமாவளவன், அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி நினைவு கூரப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “மதவாத சக்திகளின் முயற்சிகளிலிருந்து அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு ஜனநாயகச் சக்திகளுக்கு உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.க) சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது.

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வீர வணக்கம் செலுத்தபட்டது. இலங்கையில் புதிய அரசமைப்பு எழுதும் சூழலில், கூட்டாட்சி நிர்வாகம் மற்றும் தமிழர் இறையாண்மை குறித்த கோரிக்கைகளை அங்கீகரிக்க வேண்டுமென விசிக வலியுறுத்துவதாகவும், இது நிறைவேற்றப்படும் பட்சத்தில், விசிக முழுமையாக ஆதரிக்குமெனவும் தெரிவித்தார்.
மேலும், இந்திய-இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில், தமிழர்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த இந்திய அரசு தலையீடு செய்ய வேண்டும் என்பதும் அவரின் கோரிக்கை.
சிறப்பு தீவிர சீராய்வு நடவடிக்கை (SIR) என்பது குடியுரிமையைக் குறிவைத்து நகர்த்தப்படும் ஒன்று என வி.சி.க. தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. இது வெறும் வாக்காளர் பட்டியல் சீராய்வு அல்ல, குடியுரிமை குறித்த சீராய்வுதான் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டதைச் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது, அரசமைப்புச் சட்டத்தையே கேலிக் கூத்தாக்கும் முயற்சி என்றும், இதனை முற்றாகக் கைவிட வேண்டும். SIR நடவடிக்கைக்கு எதிராக விசிக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மொழிச் சிறுபான்மை உரிமைகள் பறிக்கப்படுவதாகவும், தமிழ்நாடு தனித்து விடப்பட்டிருப்பதாகவும் ஆளுநர் கூறுவது குறித்து, “யார் தமிழ்நாட்டை தனிமைப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை அவர் விளக்க வேண்டும்” என்றார்.
ஆளுநரின் நடவடிக்கைகள் சங்க பரிவாரங்களின் போக்கிற்கு ஏற்ப இருப்பதாகவும், தமிழ்நாட்டின் கோரிக்கை இந்திய தேச எல்லைக்குள் தேசிய இனத்துக்கான உரிமைகளை வழங்குவதுதான் என்றும், தமிழ்நாட்டை அந்நியப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவது ஆளுநர்தான் என்றார்.
அதிமுகவில் உள்ள செங்கோட்டையன், தவெகவில் (தமிழக வெற்றிக் கழகம்) இணைவதாக வரும் செய்திகள் எந்த அளவுக்கு உறுதியானது என்று தெரியவில்லை.
அவர் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்திருக்கிறாரா அல்லது இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் அரசியல் சூழ்ச்சி இருக்கிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பாஜக-விடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் , அவரது கட்சியில் சங்கிகள் ஊடுருவி இருப்பதாக விமர்சனங்கள் இருப்பதாகவும், மேலும் ஊடுருவல்கள் நிகழ்ந்தால் அவருடைய அரசியல் கேள்விக்குறியாகும்.
மேலும், புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி கோரியுள்ளது குறித்த கேள்விக்கு கரூர் சம்பவத்தில் உயிரிழப்புகள் நடந்ததைக் குறிப்பிட்டு, எந்த அரசியல் கட்சியும் ரோடு ஷோ போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பதே வி.சி.க.வின் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளாா்.
ராப்ரி தேவியின் மனுவிற்கு பதிலளிக்குமாறு சிபிஐ-க்கு நோட்டீஸ்… வழக்கை ஒத்தி வைத்து நீதிபதி அதிரடி…


