சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவித்துள்ளார்.
டெல்லியை சேர்ந்த இடதுகை பேட்ஸ்மேனான ஷிகர் தவான் கடந்த 2010-ஆம் ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகினார். கேப்டன் ரோகித் சர்மாவுடன் களமிறங்கி எதிரணிகளை அச்சுறுத்தும் தொடக்க வீரராக வலம் வந்தார். 2013 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்ல முக்கிய காரணமாக விளங்கிய தவான், அந்த தொடரில் தங்க பேட் விருது வென்று அசத்தினார்.
கடந்த 2019 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காயத்துடன் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து வெளியேறினார். காயத்திலிருந்து குணமடைந்த பின்னர் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தடுமாறி வந்தார். மேலும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்தார்.
இந்த நிலையில், வருங்காலத்தை கருத்தில் கொண்டு சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவித்துள்ளார். 269 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள தவான் 24 சதங்கள் விளாசியுள்ளார்.
தனது ஓய்வு அறிவிப்பில், இத்தனை ஆண்டுகளாக பக்கபலமாக இருந்து அன்பும், ஆதரவும் அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், ஆரம்ப காலங்களில் தமக்கு ஆதரவு கொடுத்த கேப்டன் தோனிக்கு ஷிகர்தவான் நன்றி தெரிவித்துள்ளார்.