கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்களை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்
டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 1 தங்கம் மற்றும் 3 வெண்கல பதக்கங்களை வென்று திருவள்ளூர் மாவட்ட மாணவர்கள் அசத்தியுள்ளனர். அவர்களை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அழைத்து பாராட்டினார்.
டெல்லியில் உள்ள தல்கடோரா உள் விளையாட்டு அரங்கில் கராத்தே அசோசியேசன் ஆப் இந்தியா நடத்திய தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. கடந்த மே 31ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். அந்தவகையில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 மாணவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
இதில் திருவள்ளூர் மாவட்ட தொழில்நுட்ப இயக்குனர் விஜயராகவன், செயலாளர் தக்ஷிணாமூர்த்தி, தலைவர் ராஜா, பொருளாளர் தனசேகர் , துணைச் செயலாளர்கள் ரமேஷ் குமார் மற்றும் தியாகராஜன் ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டனர். இதில் ஒரு மாணவி தங்கப் பதக்கமும், மூன்று மாணவர்கள் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினர். இந்தப்போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் தேசிய அளவில் நடுவர்களாக தேர்வு பெற்றவர்களை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.