
இன்று இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நடைபெறவுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மொத்த 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றனர். முதல் டி20 போட்டி மொஹாலியில் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களை எடுத்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 159 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஷிவம் துபே 60 ரன்களையும், ஜிதேஷ் சர்மா 31 ரன்களையும், திலக் வர்மா 26 ரன்களையும் எடுத்தனர்.
இந்த நிலையில், இன்று இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நடைபெறவுள்ளது. இந்தூரில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. கடந்த போட்டியில் தோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க முனைப்பு காட்டும். இதேபோல் கடந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இன்றைய போட்டியிலும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்ற தீவிர காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.