சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதாக, குஜராத் அணியின் கேப்டன் சுப்மான் கில்லுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் நடைபெறவுள்ள 7வது லீக் போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும், சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியானது நேற்றிரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜாராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மான் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் 46 ரன்னிலும், ரச்சின் ரவிந்திரா 46 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அணியின் அதிகபட்சமாக சிவம் துபே 51 ரன்கள் எடுத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 206 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து குஜராத் அணிக்கு 207 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய் விருத்திமான் சஹா 21 ரன்களிலும் சுப்மான் கில் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 37 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 143 ரன்களே எடுத்தது. சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சிவம் துபே தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இப்போட்டியில் மெதுவாக பந்துவீசியதாக குஜராத் அணியின் கேப்டன் சுப்மான் கில்லுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐபிஎல் நிர்வாகம் சுப்மான் கில்லுக்கு 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்த சீசனில் முதல் பெனால்டியை கில் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.