பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 215 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 68 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இன்று 69வது லீக் போட்டி நடைபெற்றது. ஐதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற 69வது லீக் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ஜித்தேஷ் சர்மா தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஜித்தேஷ் ஷர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து பஞ்சாப் அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அதர்வா டைட் 46 ரன்களிலும் பிரப்சிம்ரன் சிங் 71 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரில்லி ருசோ 49 ரன்களிலும் சசாங் சிங் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடி காட்டிய ஜித்தேஷ் ஷர்மா 15 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அணியை 200 ரன்கள் கடக்க வைத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 214 ரன்கள் குவித்தது.
பின்னர் 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஐதராபாத் அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் சந்திந்த முதல் பந்திலேயே ஆட்டமிழக்க மறுபுறம் எதிர்த்து களமிறங்கிய அபிஷேக் ஷர்மா அபாரமாக விளையாடி 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய திரிபாதி 33 ரன்களிலும் நிதிஷ்குமார் ரெட்டி 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடி காட்டிய ஹென்ரிச் கிளாசன் 26 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அணியானது 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 215 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் அணியின் ஆட்டநாயகனாக அபிஷேக் ஷர்மா தேர்வு செய்யப்பட்டார்.