மதுரை – சிவகங்கை மாவட்டம் இடையே இலுப்பைக்குடியில் ரூ.342 கோடி முதலீட்டில் 775 ஏக்கர் பரப்பளவில் 2வது புதிய சிப்காட் தொழிற்பூங்கா அடுத்த ஆண்டு தொடங்கபட உள்ளது.
தமிழ்நாடு அரசு 2030ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. அத்துடன் அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை அடையச் சென்னை மட்டுமின்றி மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் புதிய முதலீடுகளையும், புதிய தொழிற் பூங்காக்களையும் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சிப்காட் அமைப்பு மாநிலத்தில் அதிகம் வளர்ச்சியடையாத சிவகங்கை மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சியைத் மேம்படுத்த புதிய தொழிற்பூங்கா அமைக்க முடிவு செய்துள்ளது.
இந்த புதிய சிப்காட் தொழிற்பூங்கா மதுரை – சிவகங்கை மாவட்டத்திற்கு இடையே இலுப்பைக்குடி, கிளத்தாரி மற்றும் அரசனூர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய 775 ஏக்கர் பரப்பளவில் பெரிய அளவிலான தொழில் பூங்காவாக நிறுவ சிப்காட் திட்டமிட்டுள்ளது. ரூ.342 கோடி முதலீட்டில் உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பு மற்றும் வசதிகளுடன் இது உருவாக்கப்படுகிறது. இந்த சிப்காட் மதுரை – சிவகங்கை மாவட்டங்களுக்கு மத்தியில் அமையவுள்ளதால் இரு மாவட்டத்திற்கும் பலனளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே மதுரையில் ELCOT ஐ.டி. பார்க் செயல்படுத்தப்பட்டு வரும் வேளையில், தொழிற்துறைக்கான இந்த புதிய திட்டம் மதுரை – சிவகங்கை மாவட்டத்தில் புதிய மாற்றத்தை உருவாக்கும். இந்த தொழில் பூங்காவில் சுமார் 36,500 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது. குறிப்பாக இந்த தொழிற்பூங்கா, ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் மற்றும் டெக்ஸ்டைல் போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்தும். மேலும், லாஜிஸ்டிக்ஸ், பேக்கேஜிங் மற்றும் கிடங்கு உள்ளிட்ட துணைத் தொழில்களின் வளர்ச்சியையும் தூண்டும். இந்த புதிய சிப்காட் தொழில் பூங்கா அடுத்தாண்டு திறக்கப்பட உள்ளது.