தமிழக மீனவர்கள் 15 பேர் விடுதலை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வர மீனவர்கள் 15 பேர் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை 9 ஆம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை இரண்டு விசைப்படகையும் அதில் இருந்த 15 மீனவர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களின் வழக்கு விசாரணை ஜூலை 21ஆம் தேதி இன்று இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கஜநதி பாலன் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 15 மீனவர்களும் இனி இலங்கை கடற்படை எல்லைக்குள் வரக்கூடாது, மீறி வந்தால் கடுமையான சிறை தண்டனை விதிக்கப்படும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதித்து அவர்கள் 15 பேரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்னும் ஓரிரு தினங்களில் மீனவர்கள் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.