கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் 198 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்கள் திருடப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சேலத்தில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்களின் கனிம வளங்கள் திருடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி, அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கை பார்த்த நீதிபதிகள்,
அறநிலையத்துறை உதவி கமிஷனர் தாக்கல் செய்துள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், அறிக்கையில் தேன்கனிக்கோட்டை நாகமங்கலத்தில் உள்ள அனுமந்தராய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் 28 கோடியே 51 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள கற்கள் திருடப்பட்டுள்ளது என்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் பாலேஹூலி பட்டாளம்மன் கோயிலுக்கு சொந்தமாந நிலத்திலிருந்து 170 கோடியே 14 லட்சத்து 8 ஆயிரம் மதிப்புள்ள கற்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலங்களுக்குள் அறநிலையத்துறை அதிகாரிகள் செல்ல முடியாதவகையில் சமூக விரோதிகள் தடுத்து வருகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
கோயில்களின் கனிம வளங்கள் திருடப்பட்டுள்ள விவகாரத்தில் நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அந்த வழக்குகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த திருட்டுகளில் காவல்துறை, வருவாய்துறை மற்றும் மற்ற துறைகளின் அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளதாக இந்த நீதிமன்றம் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
ஒரு சில பேராசைக்காரர்களால் தேசத்தின் சொத்தை அபகரிப்பதை ஏற்க முடியாது என்றும்,
எனவே, இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் கோயில்களின் சொத்துக்களில் உள்ள கனிம வளங்களை சட்டவிரோதமாக திருடுவதை தடுத்து நடவடிக்கை எடுக்குமாறு சேலம் சரக காவல்துறை டிஐஜிக்கு உத்தரவிட்டுள்ளார்.
அவர் இந்த கனிம வள திருட்டு தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை, எத்தனை குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து வரும் 26ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.