
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர். அப்போது, கைப்பற்றப்பட்ட பணம் எப்படி வந்தது? வெளிநாட்டு முதலீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்விகளை அடுக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
முதல் நாளில் ஏழு மணி நேரம், இரண்டாவது நாளில் ஆறு மணி நேரம் என அமலாக்கத்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் அமைச்சர் பொன்முடி.
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும், எம்.பி..யுமான கௌதம சிகாமணியின் வீடுகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை என அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 19 மணி நேரம் நீடித்த சோதனையைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்று (ஜூலை 18) மாலை 04.00 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி, எம்.பி. கௌதம சிகாமணி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகினர்.
அவர்களுடன் தி.மு.க. வழக்கறிஞர் சரவணன், மருத்துவர் ஒருவரும் உடன் சென்றனர். சோதனையின் போது பல்வேறு ஆவணங்கள், 81 லட்சம் ரூபாய் ரொக்கம், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 41 கோடி ரூபாய் வைப்புத்தொகை முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவாரிகளுக்கு அனுமதி வழங்கிய காலத்தில் சொத்துக்கள் வாங்கப்பட்டதா? அதற்கான பணம் எப்படி வந்தது? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கேள்விகளை எழுப்பி அமைச்சர் பொன்முடியிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட பணம் மருத்துவமனை நடத்துவதன் மூலம் கிடைத்த வருவாய் என அமைச்சர் பொன்முடி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
எத்தனை ஆண்டுகள் மருத்துவமனை செயல்படுகிறது?, அதன் வருவாய் விவரம் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், கௌதம சிகாமணியிடம் அந்நிய செலாவணி வழக்கு தொடர்பாகவும், இந்தோனேசியா மற்றும அரபு நாடுகளில் முதலீடு உள்ளிட்டவைத் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அமலாக்கத்துறை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
ஆறு மணி நேர விசாரணைக்கு பிறகு இரவு 10.30 மணியளவில் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி ஆகியோரிடம் இரண்டாவது நாள் விசாரணை நிறைவுப் பெற்றது. பின்னர், இருவரும் கார் மூலம் சைதாப்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு திரும்பினர்.
அடுத்தக்கட்ட விசாரணை தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் சம்மன் எதுவும் வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.