திண்டிவனம் ரயில் நிலையத்தில் கைக்குழந்தையுடன் ரயிலில் ஏற முயன்ற போது கால் இடறி தண்டவாளத்தில் விழுந்த 4 பேர், ரயில் பெட்டிக்கு அடியில் சிக்கிக் கொண்ட சம்பவத்தால் திண்டிவனம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (50), அவரது மகள் கோமதி, மருமகன் மணிகண்டன், 7 மாத கைக்குழந்தை கிருத்திகா மற்றும் உறவினர்கள் சங்கீதா காயத்ரி, ஆகிய ஐந்து பேரும் நேற்று மாலை தெள்ளார் கிராமத்தில் இருந்து பேருந்து மூலமாக திண்டிவனத்திற்கு வந்து, திண்டிவனத்தில் இருந்து திருச்செந்தூர் கோயிலுக்கு செல்வதற்காக திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டிவனம் ரயில் நிலையத்தில் ஏற முயன்று உள்ளனர்.
அப்பொழுது ஏழு மாத கைக்குழந்தை கிருத்திகா,கோமதி, சங்கர், மணிகண்டன் ஆகியோர் ரயிலில் ஏற முயன்ற போது திடீரென கால் வழக்கி ரயிலுக்கு அடியில் மாட்டிக் கொண்டனர். உடனடியாக ரயிலில் இருந்த பயணிகள் அபாயசங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி உள்ளனர். இதில் 7 மாத கைக்குழந்தை கிருத்திகா, மணிகண்டன், கோமதி, சங்கர், ஆகியோர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்.
முன்னறிவிப்பு இன்றி ரயிலை இயக்கத் தொடங்கியதால் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், ரயிலை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், திண்டிவனம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திண்டிவனம் போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பயணிகளை அப்புறப்படுத்தினர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் 15 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.
மகனுக்காக காஜல் அகர்வால் செய்த செயல்…. குவியும் பாராட்டுகள்!