ராணிப்பேட்டையில் நள்ளிரவில் கர்நாடக அரசுப்பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 4 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 35 பேர் படுகாயம் அடைந்தனர்.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிந்து சென்றிருந்தனர். சாமி தரிசனம் முடிந்து நேற்றிரவு அவர்கள் 4 கர்நாடகா மாநில அரசு பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில் சென்னை – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பக்தர்கள் சென்ற பேருந்து ஒன்று முன்னால் மண் ஏற்றிச்சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்றது. அப்போது, எதிர்பாராத விதமாக எதிரே காய்கறி ஏற்றி வந்த ஈச்சர் லாரி மீது பக்தர்கள் பேருந்து மோதியது. மேலும் பின்னால் வந்த மண் லாரியும் பேருந்தின் பின்பக்கம் அதிவேகமாக மோதி விபத்திற்குள்ளானது.
இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 ஆண் பக்தர்கள் உயிரிழந்தனர். 35-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு வாலாஜா அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா நேரில் ஆய்வு செய்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார். விபத்து தொடர்பாக சிப்காட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.