மு.க.ஸ்டாலினுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரிவதில்லை- எடப்பாடி பழனிசாமி
விடியா அரசின் பொம்மை முதலமைச்சருக்கு, நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரிவதில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதான எதிர்க்கட்சியான அதிமுகஎடுத்து வைக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு எந்தத் தீர்வையும் காணாமல், ஆளும் கட்சியில் உள்ள ஊழல்வாதிகளை பாதுகாப்பதிலேயே கவனமாக செயல்படுவது வெட்கக் கேடானதாகும். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில், விடியா திமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் ஜவுளித் தொழிலும், நூற்பாலைத் தொழிலும் நலிவடைந்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது.


பல்வேறு கோரிக்கைளை நிறைவேற்றக் கோரி, சுமார் 600 மில்களில் நேற்று முதல் (5.7.2023) உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை மறுசுழற்சி ஜவுளித்துறை கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனால், இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உடனடியாக மறுசுழற்சி ஜவுளித் துறை கூட்டமைப்பினரை அழைத்துப் பேசி, இத்தொழில் நசிந்துவிடாமல், அவர்களது நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


