அதிமுக வழக்கில் அடுத்து என்ன?- நீதிபதிகள் பரபரப்பு தகவல்
ஓபிஎஸ் தரப்பில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
2022 ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்ற தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது ஓபிஎஸ் தரப்பு, “கட்சியில் இருந்து நீக்கிய நடவடிக்கை, கட்சி விதிகளுக்கு எதிரானது, இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட இயலும். கட்சியில் இருந்து நீக்கியதில் சட்ட விதிமீறல் உள்ளதாக தனி நீதிபதி கூறியுள்ளார். என்னை நீக்கியது தவறென்றால் அதன்பின் நடந்தது மட்டும் எப்படி சரியாகும்? இடைக்கால நிவாரணம் கிடைக்கும் வகையில் வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும்” என வாதிடப்பட்டது.
அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது, கட்சி, தொண்டர்களை தயார்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதை கருத்தில் கொண்டே பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டது. கட்சியில் 95% பேர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுள்ளனர் என இ.பி.எஸ். தரப்பில் வாதிக்கப்பட்டது.
இதனைக்கேட்ட நீதிபதிகள் வழக்கை நேரடியாக இறுதி விசாரணைக்கு எடுத்து வாதங்களை கேட்டு உத்தரவு பிறப்பிக்க அனைத்து தரப்புக்கும் சம்மதமா? என கேள்வி எழுப்பினர். அதற்கு, நேரடியாக இறுதி விசாரணைக்கு தயார் என ஓ.பி.எஸ் – இ.பி.எஸ். என இரு தரப்பும் பதில் அளித்தனர். இரு தரப்பும் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யுங்கள், ஏப்ரல் 3ம் தேதி விசாரித்து உத்தரவு பிறப்பிக்கிறோம் என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.