கோபிச்செட்டிப்பாளையம் – காணும் பொங்கலை முன்னிட்டு கொடிவேரி அணையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் பங்களாபுதூர், கடத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். அணையில் 300 சவரன் நகையுடன் குளித்த அதிமுக பிரமுகரை அதிரடியாக வெளியேற்றிய போலீசார்.
அணையில் அருவி போல் தண்ணீர் கொட்டிய பகுதியில் சுமார் 300 சவரன் நகையுடன் வாலிபர் ஒருவர் குளித்துக்கொண்டு இருப்பதை அறிந்த பங்களாபுதூர் போலீசார் சுமார் ஒரு மணி நேரம் அந்த வாலிபரையும் அவரை சுற்றி உள்ள கும்பலையும் கண்காணித்து வந்தனர்.
நீண்ட நேரமாகியும் அணையில் இருந்து அந்த வாலிபர் வெளியேறாத நிலையில், அங்கு சென்ற போலீசார், நகை அணிந்து குளித்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில் அந்த நபர் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த விஜய் என்பதும், அப்பகுதி அதிமுக கிளை செயலாளர் என்பதும் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து குடும்பத்துடன் குளித்துக்கொண்டு இருந்த அதிமுக பிரமுகர் விஜயை போலீசார் கூட்டத்தில் இருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தியதோடு, அவரை அணையில் இருந்து பாதுகாப்பு கருதி வெளியேற்றினர். சுமார் 300 சவரன் நகையுடன் குளித்துக்கொண்டு இருந்த அதிமுக பிரமுகர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.