
சென்னை அம்பத்தூரில் சாலையில் சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ திடீரென தீ பற்றி எறிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அம்பத்தூரில் உள்ள வாவின் பகுதியில் டாடா ஏசி ஷேர் ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், திடீரென ஆட்டோவில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதனை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில், உடனடியாக சுதாரித்துக்கொண்ட ஷேர் ஆட்டோ ஓட்டுநர் வாகனத்தை கரையோரமாக நிறுத்தினார். இதனை தொடர்ந்து உடனடியாக பயணிகள் அனைவரும் அவசர, அவசரமாக ஷேர் ஆட்டோவில் இருந்து கீழே இறங்கினர். பயணிகள் இறங்கிய சிறிது நேரத்திலேயே ஆட்டோ முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

இந்த நிலையில், தீ விபத்து தொடர்பாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஷேர் ஆட்டோவில் எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து அம்பத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் சென்றுகொண்டிருந்த ஷேர் ஆட்டோ திடீரென தீப்பிடித்து எரிந்த சமப்வம் அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


