கோடை வெயில் அதிகரிப்பதால் சாத்துக்குடி விலை அதிகரிப்பு
தமிழகத்தில் கத்தரி வெப்பத்தின் தாக்கம் தினமும் அதிகரித்து கொண்டே வந்துள்ளது. சென்னையில் 109 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தால் பாதிப்படைந்து வருகிறார்கள்.

இச்சூழலில் வெப்பத்திலிருந்து தப்பிக்க குளிர்ச்சியான பழங்கள், தர்பூசணி மற்றும் பழச்சாறு குடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சென்னையில் தற்போது சாலையோரங்களிலுள்ள தள்ளுவண்டி கடைகளில் சாத்துக்குடி, கிர்ணி, எலுமிச்சை உள்ளிட்ட பழச்சாறுகளின் விற்பனை சூடு பிடித்து உள்ளது.
சூட்டை தணிக்க மக்கள் பெரும்பாலும் சாத்துக்குடி ஜுஸ் குடிப்பது வழக்கம். இதனால் சாலையோர கடைகளில் சாத்துக்குடி ஜுஸ் அதிக அளவில் விற்பனையாகிறது. இதனால் கடைகளில் சாத்துக்குடி விற்பனை வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகரித்து உள்ளது.
கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு ஆந்திர மாநிலத்திலிருந்து தினசரி சாத்துக்குடி பழங்கள் விற்பனைக்கு வருகிறது. இன்று இருபது லாரிகளில் சுமார் நூற்று அறுபது டன் சாத்துக்குடி குவிந்துள்ளன.

கோடையில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பது காரணமாக சாத்துக்குடி பழங்கள் அதிகமாக தேவைப்படுகிறது. வழக்கத்தை விட வெயில் அதிகரித்து உள்ளதால் சாத்துக்குடி பழத்தின் விலையும் அதிகரித்து விற்பனையும் சூடு பிடித்து வந்துள்ளது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ சாத்துக்குடி ரூ.ஐம்பதுக்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள பழக்கடைகளில் சாத்துக்குடி ஒரு கிலோ ரூ.எழுபது முதல் ரூ.தொண்ணூறு வரை விற்கப்படுகிறது.