ஈரோடு மலைவாழ் மக்களுக்காக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த பாலா
ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடி மலை கிராமமான குன்றி கிராமத்திற்கு தன்னார்வ அமைப்பினர், ஆம்புலன்ஸ் வாகனத்தை இலவசமாக வழங்கினர்.
சத்தியமங்கலம் வட்டத்தில் கடம்பூர் மலையில் உள்ள குன்றி மற்றும் அதனை சுற்றியுள்ள அணில்நத்தம், கிளாமஸ் தொட்டி, கோயிலூர், பனையத்தூர், குஜ்ஜம்பாளையம், புளியமரத்து தொட்டி என 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரம் குடியிறுப்புகளும், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். இவர்களின் அவசர மருத்துவ தேவைக்கு 18 கி.மீ. தொலைவில் உள்ள கடம்பூர் மலைகிராமத்திற்கு செல்ல வேண்டும்.
இதற்கு யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நிறைந்த வன பாதையில் சுமார் 1 மணி நேரம் பயணிக்க வேண்டும். வனவிலங்கு தாக்குதல், மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு செல்வதில் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்தன. இந்நிலையில், சின்னத்திரை நடிகர் பாலா மற்றும் உணர்வுகள் தன்னார்வ அமைப்பின் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் மலை கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது.
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகர மேயர் நாகரத்தினம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் ஆகியோர் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தனர். ஆம்புலன்ஸ் சேவையை மலை கிராம மக்களே பராமரிக்கவும் ஏற்பாடு செய்தனர். இதற்கு நன்றி தெரிவித்த பழங்குடி மக்கள், மலை கிராம மக்களின் பாரம்பரிய இசைக்கருவியான பீனாச்சி மற்றும் மேளம் இசைத்து நடனமாடி தங்களின் நன்றியை தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதன் மூலம் அவசர மருத்துவ தேவைகளுக்கு எளிதாக செல்ல முடியும் என்றும், உயிரிழப்புகள் தவிர்க்கப்படும் என்றும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.