தமிழகத்தில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், மக்கள் சந்திக்கும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்காமல் விளம்பரப் பிரச்சாரங்களிலும் ரீல்ஸ் எடுப்பதிலும் முதல்வர் விஜய் கவனம் செலுத்தி வருவதாகவும் சுந்தரவள்ளி மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு: கொடூர சம்பவங்கள் குறித்து சாடல்
தமிழகத்தில் தினசரி கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடக்கும் கொடூரக் கொலைகள் மாநிலத்தின் சட்ட ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது என்பதைக் காட்டுகின்றன என்றார். மேலும், மக்கள் நலன் மற்றும் பாதுகாப்பு சார்ந்த கேள்விகளைக் கேட்கவே பொதுமக்கள் அஞ்சும் சூழல் நிலவுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

அமைச்சர்கள் விரட்டியடிப்பு: தூய்மைப் பணியாளர்கள் கொந்தளிப்பு
தலைநகரில் தூய்மைப் பணியாளர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக 13 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், அவர்களை நேரில் சந்தித்துப் பேச அரசுத் தலைமை மறுத்து வருகிறது. இச்சூழலில், போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மாணவர்களைச் சந்திக்கச் சென்ற தவெக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களான லயோலா மணி, பள்ளிப் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோரை மக்கள் கோபத்துடன் விரட்டியடித்துள்ளதாக சுந்தரவள்ளி குறிப்பிட்டார்.
மேட்டூர் அணை திறப்பும் “ரீல்ஸ்” அரசியலும்
மேட்டூர் அணையைத் திறக்கும் நிகழ்வு குறித்துப் பேசிய அவர்:
முதலமைச்சர் விஜய் பட்டு வேட்டி-சட்டையுடன், நூற்றுக்கணக்கான பவுன்சர்கள் சூழச் சென்று அணையைத் திறந்து வைத்துள்ளார்.
முதல்வரைப் பார்க்க வரும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தள்ளிவிடப்படும் சம்பவங்கள் தொடர்கின்றன.
தவெக தொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் இதுவரை உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
மக்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்சினைகளைக் கவனிக்காமல், வாரம் இருமுறை விளம்பரத்திற்காக ‘ரீல்ஸ்’ எடுக்கும் துறையாக மட்டுமே முதல்வரின் துறை செயல்பட்டு வருவதாக சாடினார்.

சட்டமன்ற சர்ச்சை: காங்கிரஸ் பொய்ப் பிரச்சாரமும் செங்கோட்டையன் நடவடிக்கையும்
சட்டமன்றத்தில் நடந்த விவாதங்களைக் குறிப்பிட்ட சுந்தரவள்ளி, பெருந்தலைவர் காமராஜர் மறைந்தபோது மெரினாவில் இடம் தரப்படவில்லை என காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ ஒருவர் சட்டமன்றத்தில் தவறானத் தகவலைப் பதிவு செய்துள்ளார் என்றார். ஆனால், “நாங்கள் மெரினாவில் இடம் கேட்கவே இல்லை” என காமராஜரின் பேத்தியே தெளிவுபடுத்தி உண்மையைப் அம்பலப்படுத்தியுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டினார். அதேபோல், உத்தராகண்டில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சென்ற இடத்தில் பாஜகவினர் தீட்டு கழித்த சம்பவத்தைச் சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் விமர்சித்தபோது, பாஜகவுக்கு ஆதரவாகச் செங்கோட்டையன் குறுக்கிட்டு அந்தச் சொற்களை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வைத்துள்ளதாகக் கூறினார்.
“உழைக்கும் மக்களைப் பகைத்தால் ஆட்சி நிலைக்காது”
மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் வாக்களித்த உழைக்கும் வர்க்கத்து மக்களை ஏமாற்றி, புல்டோசர் கலாச்சாரத்தையும் அடக்குமுறையையும் கையாளும் விஜய் அரசுக்கு, தமிழக மக்கள் விரைவில் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என சுந்தரவள்ளி எச்சரித்துள்ளார்.
“சட்டமன்றமா? பிக் பாஸ் நிகழ்ச்சியா?” – நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமை சாடல்!
