தமிழ்நாட்டை 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை அடைவோம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாட்கள் அரசுமுறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 29 ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றுகிறார். பின்னர் ஆகஸ்ட் 31 ஆம் தேதி அமெரிக்கா வாழ் தமிழர்களைச் சந்தித்து பேசுகிறார். சான்பிரான்சிஸ்கோவிலிருந்து செப்டம்பர் 2-ஆம் தேதி சிகாகோ செல்லும் அவர், செப்டம்பர் 7-ஆம் நாள் சிகாகோவில் தமிழர்களுடனான மாபெரும் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 14 ஆம் தேதி தனது பயணததை நிறைவு செய்து, சென்னை திரும்புகிறார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு பயணங்களை தான் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், யுஏஇ, ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்தால் தமிழ்நாட்டிற்கு 10 ஆயிரத்து 882 கோடி மதிப்பிலான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். அதில் ரூ.990 கோடி முதலீட்டுக்கான 5 திட்டங்கள் தற்போது உற்பத்தியை மேற்கொண்டுள்ளதாகவும், ரூ.3,796 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கான பணிகள் முன்னேற்ற நிலையில் உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் ரூ.9.99 லட்சம் கோ டி மதிப்பில் 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 18.89 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டை 2030க்குள் முதலீடுகள் மூலம் ஒரு டிரில்லியன் பொருளாதார இலக்கை தமிழ்நாடு அடை யும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் ரஜினிகாந்த் – துரை முருகன் விவகாரத்தை நகைச்சுவையாக பார்க்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறினார்.