கோவையைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம்
கோவையைச் சேர்ந்த தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் பேருந்து ஓட்டும் முதல் பெண் ஓட்டுநர் ஷர்மிளா. இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றிவந்தார். முதல் பெண் ஓட்டுநர் என்பதால் ஷர்மிளாவுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கோவை காந்திபுரம் – சோமனூர் தடத்தில் தனியார் பேருந்தை இவர் இயக்கிவந்தார். அதுமட்டுமின்றி, சமூக வலைதளங்களில் இவரது வீடியோக்கள் வைரலானதை அடுத்து, கடந்த வாரம் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஷர்மிளாவை சந்தித்து வாழ்த்துக்கூறினார்.

இந்நிலையில் இன்று திமுக எம்பி கனிமொழி பேருந்தில் பயணம் செய்தார்.காந்திபுரத்தில் இருந்து லட்சுமி மில் சந்திப்பு வரை பயணம் செய்து ஷர்மிளாவை பாராட்டினார். இந்த சூழலில் திடீரென பெண் ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து ஷர்மிளா மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. திமுக எம்பி கனிமொழி பயணித்தபோது, பயணச்சீட்டு கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓட்டுநர் ஷர்மிளா, “காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை பேருந்து ஓட்டுகிறேன். ஆனால் நான் ஏதோ பாப்புலாரிட்டி தேடுவதற்காக பேருந்து ஓட்டுவதாகவும், நானே முக்கியஸ்தர்களை அதற்காக அழைப்பது போலவும் பேருந்து உரிமையாளர் பேசினார். ஒரு டிரைவரின் நிலைமை இப்படி தான் என்பது தான் வருத்தமாக இருக்கிறது” என்றார்.