
தி.மு.க. கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.
நடைமேடைக்கு பதிலாக தண்டவாளத்தில் பயணிகள் இறங்கியதால் விபத்து!
வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 2 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து, அதற்கான ஒப்பந்தத்தில் தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அதேபோல், தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். எனினும், எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.
ஏற்கனவே, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு இராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கீடு செய்திருந்தது தி.மு.க. தலைமை. அதைத் தொடர்ந்து, இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் நவாஸ் கனி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், “எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து தி.மு.க.விடம் பேசியுள்ளோம். எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவுச் செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.