விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்ததில் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக கனிமொழி எம்.பி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி. மற்றும் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் பாதுகாப்பு பணியில் இருந்த 22 வயதான பெண் காவலரிடம் அக்கூட்டத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் அத்துமீறி பாலியியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.
விசாரணையில் அவர்கள் சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரவீன் (23), சின்மயா நகரைச் சேர்ந்த ஏகாம்பரம் (24), என்பது தெரியவந்தது. இருவரும் திமுக நிர்வாகிகளாவார். இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து திமுக நிர்வாகிகள் 2 பேரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார். திமுகவை சேர்ந்த பிரவீன், ஏகாம்பரம் ஆகியோரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனிடையே சென்னை, விருகம்பாக்கத்தில் திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் 2 நபர்கள் அத்துமீறிய விவகாரத்தில் தொடர்புடைய பிரவீன், ஏகாம்பரம் ஆகிய இருவரையும் போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர்.