இலங்கையை ஒட்டிய வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று தற்போது மிக்ஜாம் புயல் சென்னைக்கு கிழக்கு வட கிழக்கில் கிட்டதட்ட 100 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ள நிலையில், தொடர்ந்து வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று முற்பகல் தீவிரமான புயலாக மாறக்கூடும்.
எனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று இரவு வரை பலத்த காற்றுடன் கூடிய கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். குறிப்பாக சென்னை மற்றும் வடகடலோர மாவட்டங்களில் நேற்று இரவு முதல் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையால் தாம்பரம் ரயில் நிலையத்தில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். ஓயாது பெய்ந்து வரும் அதி கன மழையால் மக்களின் இயல்புநிலை வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.பல அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் விடுமுறை என்பதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கும் சூழ்நிலையும் காணப்படுகிறது. பல இடங்களில் மரங்கள் முறிந்தும் விழுந்திருக்கின்றன. எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என முன்னெச்சரிக்கையாக மின் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளான மருந்தகங்கள், பால், மருத்துவமனை போன்றவை மட்டுமே செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலான கடைகளும் மூடப்பட்டுள்ளது. ஆதலால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படியும் அவசியம் இல்லாமல் வெளியில் வர வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் சூழ்ந்த வெள்ள நீர்….. பாதுகாப்பாக இருக்க வேண்டுமென பொது மக்களுக்கு அறிவுறுத்தல்!
-
- Advertisement -