‘வேலைக்கு தகுதியே இல்லாதவங்க’ மருத்துவமனை பணியாளர்களை அலறவிட்ட ககன் தீப் சிங்
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுகாதாரமற்ற முறையில் கழிவறைகள் இருந்ததால் மருத்துவமனை அதிகாரிகளை கடிந்துகொண்டார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அரசு மருத்துவமனையில் அனைத்து பிரிவுகளுக்கும் சென்று அங்குள்ள கழிவறைகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுகாதாரமற்ற முறையில் இருந்த பொதுக்கழிவறையை ஆய்வு செய்த போது கழிவறைகள் சுத்தமில்லாமல் இருந்தது. மேலும், போதிய வெளிச்சம் இல்லாமலும், ஒரு சில கழிவறைகளில் கதவுகள் இல்லாததால் அதிகாரிகளிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினார்.
மேலும் தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் துப்புரவு பணியாளர்களின் மேலாளர் சிலம்பரசனை அழைத்து இந்த வேலைக்கு நீங்கள் தகுதியில்லை எனவும், பணியில் இருந்து உடனே வெளியேறுங்கள் எனவும், நீங்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டாம் எனவும் ககன் தீப் சிங் கடுமையாக சாடினார். இதன் தொடர்ச்சியாக தாய், சேய் நல பிரிவில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது அவருடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.