சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.30) மாலை 05.00 மணிக்கு நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ரகுபதி, ராஜகண்ணப்பன் ஆகியோர் முதலமைச்சருடன் உடனிருந்தனர்.
ஆளுநருடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “ஆளுநர் அழைப்பு விடுத்ததன் பேரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார். உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆளுநரைச் சந்தித்தோம். மசோதாக்களில் உள்ள குறைகள் என்னவென்று முதலில் சொல்லி இருந்தால் விளக்கம் அளித்திருப்போம்.
20 மசோதாக்கள் ஆளுநரால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளன. இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், மசோதாக்கள் பரிசீலிக்கப்பட வேண்டும். ஒரு மசோதா மட்டும் ஆளுநரிடம் உள்ளது. முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, விஜயபாஸ்கர் மீது விசாரணை நடத்த அனுமதி கோரியுள்ளோம்.
“1,000 கோடி மதிப்பில் நிவாரணத் தொகுப்பு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சிறைக் கைதிகள் முன்விடுதலை தொடர்பாக 49 கோப்புகள் ஆளுநர் ஒப்புதலுக்காக உள்ளன. தமிழக ஆளுநருடனான முதலமைச்சரின் சந்திப்பு சுமூகமாக இருந்தது. முதலமைச்சர் எல்லோருக்கும் மதிப்பு தருபவர்; ஆளுநரும் முதலமைச்சருக்கு நல்ல மரியாதைத் தந்தார்” எனத் தெரிவித்துள்ளார்.