தீபாவளிக்கு வெளியான டியூட் திரைப்படத்தில், தனது 2 பாடல்களை பயன்படுத்தியுள்ளதாக இசைஞானி இளையராஜா புகார் அளித்துள்ளார்.
சோனி மியூசிக் என்டர்டெயின்மெண்ட் இந்தியா இடைவேட் லிமிடெட் நிறுவனம், எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக இசைஞானியும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா , சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் பல்வேறு ஊடகங்கள், இணையதளங்கள் , இசை நிறுவனங்கள் தனது பாடல்களை முறையான அனுமதி இல்லாமல் பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தி வருவதாக தெரிவித்திருந்தார்.
மேலும், சோனி நிறுவனம் எக்கோ நிறுவனத்திடம் இருந்து பாடல்களை வாங்கியதாகக் கூறினாலும், அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அதனை மதிக்காமல் தன்னுடைய படைப்புகளை அனுமதியில்லாமல் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தனது பாடல்கள் மூலம் சோனி நிறுவனம் ஈட்டிய வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமெனெவும் இளையராஜா தரப்பு கேட்டுக்கொண்டது. அதன்படி வரவு செலவுகளை தாக்கல் செய்ய சோனி நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை இன்றைய தேதிக்கு ( அக்.22) ஒத்திவைத்தார்.

இன்றைய தினம் வழக்கு நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சீலிடப்பட்ட கவரில் சோனி நிறுவனது தனது வருமான விவரங்களை தாக்கல் செய்தது. அப்போது அண்மையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியான ‘டியூட்’ திரைப்படத்தில் தனது 2 பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாக இளையராஜா தரப்பு கூறியது. அதற்கு பதிலளித்த நீதிபதி, டியூட் திரைப்படம் தொடர்பாக தனியாக வழக்கு தொடரலாம் என்று கூறி வழக்கு விசாரணையை அடுத்த மாதம் ( நவ) 19ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.



