கோட்டையில் உட்கார்ந்தபடி, ஆட்சி நடத்துபவனாக இல்லாமல், களத்திலிருந்து பணியாற்ற வேண்டும் என்று நினைப்பவன் தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கோயம்புத்தூர் அனுப்பர்பாளையம் பகுதியில் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் 7 தளங்களுடன் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்பட உள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமைக்கப்படும் இந்த நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்நது நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது, அவர் கூறியதாவது:- கோவை மாவட்டத்திற்கு அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த ‘Comeback’ கொடுத்திருக்கிறார் நம்முடைய செந்தில் பாலாஜி! அவரின் சிறப்பான, வேகமான செயல்பாடுகளைப பார்த்து, நடுவில் சில தடைகளை ஏற்படுத்தினார்கள். ஆனால், அந்த தடைகளையெல்லாம் உடைத்து, மீண்டும் வந்திருக்கிறார்! தொடர்ந்து கோவைக்காக, சிறப்பாக செயல்படுவார், செந்தில் பாலாஜி, அது உறுதி, உறுதி!
கோவையில் தற்போதுள்ள டைடல் பார்க் அருகிலேயே, எல்கோசிஸ் பகுதியில் உள்ள 17.17 ஏக்கர் பரப்பளவில், மேலும் ஒரு பெரும் தகவல் தொழில்நுட்ப வளாகம் அமைக்கப்படும். சுமார் 36,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய வகையில், மூன்று மில்லியன் சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த தகவல் தொழில்நுட்ப வளாகம், கோயம்புத்தூர் மாநகரத்தின் எதிர்கால வளர்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லாக நிச்சயம் அமையும்.
கடந்த சட்டமன்றத் தேர்தலை விட நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் செல்வாக்கு அதிகமாகி இருக்கிறது. இதுதான், பலரும் நம்மை விமர்சிக்கக் காரணம்! எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் – அதையெல்லாம் பொருட்படுத்தாமல், மக்களுக்கான எங்களின் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருப்போம்! இன்றைக்கு நாம் பார்க்கும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது, திமுக ஆட்சி! எங்களுக்கு ஒரு விஷன் இருக்கிறது! அதை செயல்படுத்துவதற்கான மிஷன் தான் ஆட்சியதிகாரம்!
50 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு வடமாநிலமும், தமிழ்நாடும் எப்படி இருந்தது என்று பாருங்கள்! இன்றைக்கு, அதே வடமாநிலத்துடன் தமிழ்நாட்டை மறுபடியும் ஒப்பீடு செய்து பாருங்கள்! உங்களுக்கே அது புரியும். தமிழ்நாடு, இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம்! இந்தியாவிலே அதிக நகரமயமான மாநிலம்! ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் முதல் மாநிலம்! இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில், கிட்டத்தட்ட 20 விழுக்காடு தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. தொழிற்சாலைகளில் மொத்த பதிவு விகிதம் என்று சொல்வார்கள். அந்த குறியீட்டில் 48 விழுக்காடு மேற்கொண்டிருக்கும் மாநிலம், தமிழ்நாடுதான். தெற்கு ஆசியாவிலேயே சுற்றுலா மேற்கொள்வதில் முன்னணி மாநிலம் தமிழ்நாடு!
என்னைப் பொறுத்தவரையில், கோட்டையில் உட்கார்ந்தபடி, ஆட்சி நடத்துபவனாக இல்லாமல், களத்திலிருந்து பணியாற்ற வேண்டும் என்று நினைக்கிறவன் இந்த ஸ்டாலின் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. வரலாற்றில் நிலைத்திருக்கும் திட்டங்களை ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில், ஒளியேற்றும் திட்டங்களை செயல்படுத்தி பெயர் பெற்றவன்தான், உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கக் கூடிய இந்த ஸ்டாலின் என்பதையும் நான் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்!, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.