தென் தமிழகத்தில் ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை போட்டி நடத்தப்படுவதன் மூலம் விளையாட்டுத் துறையில் தென் மாவட்டங்களும் மேம்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுரை மற்றும் சென்னையில் வரும் நவம்பர் – டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இடையே மேற்கொள்ளப்பட்டது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியின் போது, ஜூனியர் ஹாக்கி உலக கோப்பைக்கான இலட்சிணையை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர், இந்த உலகக் கோப்பை போட்டிக்காக, விளையாட்டுத் துறை பட்ஜெட்டில் 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதை சுட்டிக்காட்டினார். இந்த விளையாட்டுப் போட்டி மதுரை மற்றும் சென்னையில் நடப்படுவது குறித்து பெருமை தெரிவித்த அவர், 24 அணிகள் உலகம் முழுவதும் இருந்து போட்டியில் பங்கேற்பதையும் குறிப்பிட்டார்.
தமிழகத்தை விளையாட்டு போட்டிகளுக்கான தலைமையகமாக உருவாக்க அனைவரும் ஒன்றாக உழைப்போம் என்று உதயநிதி கேட்டுக் கொண்டார். இந்த போட்டிகள் நவம்பர் 28 முதல், டிசம்பர் 10 வரை நடந்தப்பட உள்ளதாக துணை முதல்வர் தெரிவித்தார். கோவையில் உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி ஸ்டேடியம் ஏற்கனவே இருக்கிறது என்றும் தென்னகத்தில் இந்த போட்டி நடக்கும் பொழுது விளையாட்டு துறையில் தென்பகுதிகளும் மேம்பாடு அடையும் என்றும் அவர் கூறினார்.
அதையொட்டியே மதுரையில் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறதென உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாட்டைச் சேர்ந்த பீகார் மாநில விளையாட்டுத் துறை ஐபிஎஸ் அதிகாரி ரவீந்திரன் சங்கரன், கடந்த 20 ஆண்டுகளாக விளையாட்டு துறையில் பீகார் பின் தங்கி இருந்ததாக கூறினார்.
தான் பொறுப்பேற்ற பிறகு தமிழ் நாட்டை பார்த்து பயின்று தான் பீகாரில் விளையாட்டுத் துறையை மேம்படுத்த அனைத்தையும் செய்ததாக அவர் தெரிவித்தார். கேலோ இந்தியா சென்னையில் நடைபெற்ற போது பீகார் 5 பதக்கங்களை வென்ற நிலையில் தற்போது 26 பதக்கம் வென்றுள்ளதாக குறிப்பிட்ட ரவீந்திரன் சங்கரன் நல்ல வீரர்களை உருவாக்கி உலகளவில் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவை வெற்றி பெறு வைப்பதே தமது நோக்கம் என்றார்.
திமுக கூட்டணியில் எந்த ஓட்டையும் விழாது…இந்த கூட்டணி எஃகு கோட்டை… செல்வப் பெருந்தகை பெருமிதம்…