
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் இன்று (ஜூலை 17) காலை 07.30 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
சென்னை சைதாப்பேட்டையில், ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சரின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதியின் மக்களவை உறுப்பினருமான கௌதம சிகாமணியின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், சண்முகபுர காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், விக்கிரவாண்டியில் உள்ள கல்லூரி, கப்பியாம்புலியூரில் உள்ள கல்வி நிறுவனங்கள், கல்வி அறக்கட்டளை ஆகிய இடங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது.
சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் இடங்களில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சரின் மகன் கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை!
பெங்களூருவில் இன்று நடைபெறவுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லவுள்ள நிலையில், அமைச்சர் வீட்டில் சோதனை நடைபெற்று வருவது எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள நிலையில், இரண்டாவது அமைச்சராக பொன்முடி அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.